தேடுங்கள்.....

Friday, April 5, 2013

படித்ததில் பிடித்தது 7

பில்கேட்ஸ் அமெரிக்காவில் ஓர் உயர்தர ஓட்டலில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்தவுடன் பில் தொகையுடன் ஐந்து டாலர்கள் அந்த சர்வருக்கு டிப்ஸ் தந்தார்.

சர்வரின் நெற்றி சுருங்கியது.

""பில் தொகையில் வித்தியாசமா?'' பில்கேட்ஸ் கேட்டார்.

""இல்லை சார்... நேற்று இதே ஓட்டலில் உங்கள் பையன் உணவருந்திவிட்டுச் சென்றார். அவர் அந்த சர்வருக்கு 50 டாலர்கள் டிப்ஸ் தந்தார். நீங்கள் அவருடைய தந்தை. பலகோடி டாலர்களுக்குச் சொந்தக்காரர். ஐந்து டாலர்கள்தான் தருகிறீர்கள். ஆச்சரியமாக இருந்தது''

பில்கேட்ஸ் சிரித்துக் கொண்டே சொன்னார்:

""அவனுடைய தந்தை ஒரு கோடீஸ்வரர். ஆனால் என்னைப் பெற்றவர் ஒரு மரத் தொழிலாளிதான். அதை நான் எப்போதும் மறக்கமாட்டேன். கடந்த காலம் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும்'

*************************************************************************************
குரு இறக்கும் தருவாயில் இருப்பதை அறிந்த சீடன், அவரைப் பார்க்க அவருடைய இருப்பிடத்துக்குச் செல்லாமல், கடைவீதிக்கு ஓடினான். குருவுக்குப் பிடித்த கொய்யாப் பழத்தை வாங்கிக் கொண்டு வந்து குருவிடம் கொடுத்தான்.

குரு அதைச் சுவைத்து உண்ணத் தொடங்கினார்.

சீடன் கேட்டான்:

""குருவே, எங்களை விட்டுப் போகப் போகிறீர்கள். நாங்கள் எப்போதும் நினைவில் கொள்ள உங்கள் கடைசி அறிவுரை என்ன?''

""இந்தக் கொய்யாப் பழம் ரொம்பவும் சுவையாக இருந்தது'' புன்னகையுடன் சொல்லிவிட்டு குரு இறந்து போனார்.

சாவைத் தடுக்க முடியாது. அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இந்தக் கணத்தில் என்ன செய்கிறோமோ அதுதான் வாழ்க்கை. அதை மகிழ்ச்சிகரமாக அனுபவி என்று குரு சொன்னதை சீடர்கள் புரிந்து கொண்டனர்.
************************************************************************************
அந்த ஓட்டலுக்கு மூன்று நண்பர்கள் தங்க வந்திருந்தனர். அவர்களுக்கு ஏழாவது மாடியில்தான் தங்க அறை கிடைத்தது. ஓட்டல் முதலாளி அவர்களிடம், ""இரவு பத்து மணிக்கு மேல் வந்தால் லிஃப்ட் வேலை செய்யாது. அப்புறம் நூறு படிகளை ஏறித்தான் உங்கள் ரூமுக்குப் போக முடியும். அதனால் பத்து மணிக்குள் வந்துவிடுங்கள்'' என்றார் கண்டிப்புடன்.

ஆனால் நண்பர்கள் வெளியே போய்விட்டுத் திரும்பி வரும்போது இரவு 11 மணியாகிவிட்டது. லிஃப்ட் வேலை செய்யவில்லை. மூவரும் மூச்சு வாங்க படியேறி ரூம் வாசலை அடைந்தனர்.

நண்பர்களில் ஒருவன் சொன்னான்: ""நான் அறைச் சாவியை ரிசப்ஷனில் கொடுத்திருந்தேன். வரும்போது ஞாபக மறதியால் அதை வாங்கி வரவில்லை. யாராவது கீழே போய் எடுத்துட்டு வர முடியுமா?''

இன்னொருவன் சாவியை வாங்க படிகளில் இறங்கி கீழே போய்விட்டு மூச்சிரைக்க இரைக்க மாடிப்படி ஏறி வந்தான்.

""ரிசப்ஷனில் சாவியைக் கொடுக்கலையாமே'' என்றான் சிறிது கோபத்துடன்.

""ஆமாம்.. சாவி என் பேண்ட் பாக்கெட்டில்தான் இருக்கு'' என்று சாவியை எடுத்துப் பூட்டைத் திறக்க முயன்றான். பூட்டுத் திறக்கவில்லை.

""ஏன் திறக்கமாட்டேங்குது. நாம் ரூம் மாறி வந்துட்டோமா?'' என்று கேட்டான்.

அதற்கு மூன்றாமவன் சொன்னான்: ""நாம் தங்கியிருந்தது இந்த ஓட்டல் இல்லை. அது பக்கத்துத் தெருவில் இருக்கு''
*************************************************************************************
ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் ஒருநாள் தமது அரண்மனை சோதிடரைக் கூப்பிட்டார். தமது ஜாதகக் குறிப்பை அவரிடம் கொடுத்தார்.

""இதைப் பாருங்கள், என்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதைச் சொல்லுங்கள்?'' என்றார்.

சோதிடர் அதை வாங்கிப் பார்த்தார். கிரக நிலைகளை ஆராய்ந்து பார்த்தார்.

அப்புறம் சொன்னார், ""அரசே, உன்னுடைய உறவினர்கள் எல்லோரும் உனக்கு முன்பாகவே இறந்துவிடுவார்கள். நீ உனது கைகளாலேயே அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டிவரும்!'' என்றார்.

இதைக் கேட்டதும் ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது. ஏனென்றால் உறவினர்கள் மீது அவருக்கு அளவுகடந்த பாசம் இருந்தது.

உடனே, சேவகர்களை அழைத்து, ""இந்த சோதிடருக்கு ஆயுள் தண்டனை அளிக்கிறேன். உடனே சிறையில் அடையுங்கள்!'' என்று உத்தரவு போட்டார்.

பிறகு, இன்னொரு சோதிடரை அழைத்து வரச் செய்தார். அவரிடம் ஜாதகத்தைக் கொடுத்து, எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கச் சொன்னார்.

அவர் சொன்னார், ""அரசே! உங்களுடைய ஜாதகம் மிகவும் நல்ல ஜாதகம். உங்களுடைய உறவினர்கள் எல்லோரையும்விட நீங்கள் அதிக காலத்துக்கு வாழ்வீர்கள்'' என்றார்.

இதைக் கேட்டதும் ராஜாவின் முகத்தில் மகிழ்ச்சி! அந்த சோதிடருக்கு நிறைய வெகுமதிகள் கொடுத்து அனுப்பி வைத்தார்.

இப்போது கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... இரண்டு சோதிடர்களும் சொன்ன செய்தி ஒன்றுதான்! ஆனால் ஒருவருக்குக் கிடைத்தது ஆயுள் தண்டனை. இன்னொருவருக்கு வெகுமதி கிடைத்தது.

என்ன காரணம்? இரண்டாவது சோதிடர் சரியான

உத்தியைக் கையாண்டார். அவ்வளவுதான்!
*************************************************************************************

No comments:

Post a Comment

என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................